

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சென்றுள்ளார். முதற்கட்டமாக மார்ச் 4-ம் தேதி இங்கிலாந்து பிரதமர் கியா் ஸ்டாா்மரை சந்தித்தாா். பின்பு ‘செவனிங் ஹவுஸ்’ இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். அப்போது அந்த இல்லம் வெளியே ஒன்று திரண்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்பு ஜெய்சங்கர் வெளியே வந்தபோது அவரை காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் தாக்க முயற்சித்தார்.
அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்த நிலையில், தனது கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை அவர் கிழித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. ஆனாலும், காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்யாமல் பிரிட்டன் காவலர்கள் எச்சரிக்கையுடன் விடுவித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அமைச்சர் ஜெய்சங்கருக்கு நடந்த இந்த பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்புத்துறை அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் ஏற்கெனவே இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

