• Wed. Apr 24th, 2024

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில்
உணவு பொருட்களை வழங்க
எடப்பாடி வேண்டுகோள்

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், பால், உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு, எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்களது அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் பால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய, அவசர உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தி.மு.க. அரசு போதிய அளவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில், பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, வெள்ளம் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரை பொறுத்தவரையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு நடந்து முடிந்திருக்கிறது? என்பதை அறுதியிட்டு கூற முடியாத ஆட்சியாளர்கள் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். ஒகி புயலின் போதும், கஜா புயலின் போதும். சுனாமியின் பெரும் தாக்கத்தின் போதும்,
2020-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய மழை வெள்ளத்தின் போதும் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து களத்தில் இறங்கி களமாடிய இயக்கம் அ.தி.மு.க. மாறாக, கடந்த சில தினங்களாக ஆட்சியாளர்கள் ஒரு சில இடங்களை மட்டும் மேம்போக்காக
பார்வையிட்டுவிட்டு மற்ற பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்கவில்லை. மழையின் வெள்ளச் சேதத்தின் உண்மையான நிலையை சொல்லாமல் மாறி, மாறி ஆட்சியாளர்கள் பேசி வருகிறார்கள்.
எனவே அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுடைய பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்கிட வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் அ.தி.மு.க. உடன்பிறப்புகளே முன்கள வீரர்கள், தன்னலம் கருதாத தியாகச் செம்மல்கள் என்ற வீர வரலாறு நம் பொதுவாழ்வுக்கு உண்டு. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *