• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 23, 2022

நற்றிணைப் பாடல் 48:

அன்றை அனைய ஆகி, இன்றும், எம்
கண் உளபோலச் சுழலும் மாதோ
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமரிடை உறுதர, நீக்கி, நீர்
எமரிடை உறுதர ஒளித்த காடே.

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுக்கோ
திணை: பாலை

பொருள்:

எம் தந்தையிடம் மணம் பேச வராமல் ஒளிந்துகொண்ட நீ, பொருள் தேடும் வழியில் காட்டு மறவர் அம்புக்குத் தப்பிப் பிழைத்து வரவேண்டுமே – என்று தோழி ‘பொருள் தேடிவரச் செல்கிறேன்’ எனக் கூறிய தலைவனிடம் தம் கவலையைத் தெரிவிக்கிறாள். 
முதல்நாள் அன்று எப்படி இருந்தாயோ அப்படியே இன்றும் என் கண்ணுக்குள் சுழல்கிறாய். குடை போன்று பூத்துக் கிடக்கும் கோங்கம் பூக்கள் வானத்தில் உள்ள மீன்கள் போலத் தோன்றும் அல்லவா. முல்லை நிலம் பூத்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் காட்டுவழி. இடி போன்ற முழக்கத்துடன் வழிப்பறி மறவர்கள் அங்குத் தோன்றுவர். அவர்கள் கையில் தொடி அணிந்திருப்பர். கூர்மையான அம்பு எய்வதில் அவர்கள் வல்லவர்கள். அவர்களுக்கு அஞ்சாமல் போர் செய்து வரவேண்டும். அதன் பிறகு எம் தந்தையிடம் வரவேண்டும். இந்தக் காட்சிகள் என் கண்ணில் சுழல்கின்றன.