• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Apr 10, 2024
நற்றிணைப்பாடல்357:

நின் குறிப்பு எவனோ? – தோழி! – என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே

பாடியவர் : குறமகள் குறியெயினி                                                     திணை:

பொருள்:

தோழீ! என் கருத்தானது என்னோடு பொருந்தாதாயினும், சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் ஆகாயத்தில் உயர்ந்து நன்றாகத் தோன்றுகின்ற மலையின் பக்கத்தில்; மழைபெய்யுமளவில் அம் மழையிலே நனைந்து மயிர் சிலிர்த்த நீலமணிபோன்ற புள்ளிகளையுடைய குடுமியையும் பீலியையுமுடைய மயில் சென்று; உலாவி வருகின்ற சோலை சூழ்ந்த அழகிய இடமகன்ற கற்பாறையில் உற்ற அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையிடத்துள்ள; மையுண்ட கண்ணையொத்த குவளைமலர்களைக் கொய்து; நீராடும்பொழுது அந்நீர் அலைத்தலானே குலைந்த மாலையையுடைய சாரல் நாடனுடனே; அருவியில் ஆடிய நாளினை நினைந்து; எக்காலத்தும் நெஞ்சைப் புண்படுத்திக் கொண்டு கெட்டொழிய அறியாததாயிராநின்றது; அது காரணமாக நின் கருத்துத்தான் எவ்வாறுளதோ? அதனைக் கூறிக்காண்.