• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Apr 12, 2024

நற்றிணைப்பாடல் 358:

'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி,
நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம்,
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என                                                                                                               கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ - தோழி!
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என்                                                                                                    அரும் பெறல் ஆய் கவின் தொலைய,
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.

பாடியவர்: நக்கீரர் திணை : நெய்தல்

பொருள்:

தோழீ! பெரிய செவ்விய பஞ்சுபோன்ற தலையையுடைய இறாவின் முடங்கலை; சிறிய வெளிய காக்கை நாட்காலையில் இரையாகப் பெறுகின்ற பசிய பூணை அணிந்த பாண்டியனது மருங்கூர் போன்ற; எனது அரிதாகப் பெற்ற நுண்ணிய அழகெல்லாம் கெடும்படியாக; என்னைப்பிரிந்து அங்கே தங்குதற்கு வல்ல தலைவர்; முன்னொருபொழுது நம்முடைய பெரிய தோள் தளர்வடைய அழகிய வரி (இரேகை)கள் வாட்டமுறச் சிறிய மெல்லிய கொங்கைகளிலே பெரிய பசலை பரவ; நாம் இத் தன்மையேமாதலும் அவர் தம் காதலியைப் பிரிதலால் இவ்வண்ணம் ஆயினாள் என்று என்னைக் கண்டு வெட்கமுற்று; தெய்வத்தை முன்னிலைப் படுத்தி இனி ஒருபொழுதேனும் பிரியேனென்று நின்னுடனே சூளுற்றனராயினும் அங்ஙனம் கூறிய சூள் பொய்த்தலானே அதுகாரணமாக; எவ்வளவேனும் அவரை வருத்தாதேகொள்! அவரைப் பாதுகாப்பாயாக! நீ வாழிய என்று; கணங்களையுடைய அக் கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டு நீர்வளாவிச் சாந்தி செய்து பரவுக்கடன் கொடுத்து இறைஞ்சினமாகிப் பின்பு வருவோம், அதற்காக ஆண்டுச் செல்வோமோ? ஒன்று ஆய்ந்து கூறுவாய் காண்!