

நற்றிணைப்பாடல் 346:
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா – என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல் மட மா அரிவை தட மென் தோளே?
பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார் திணை : பாலை
பொருள்:
நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத் திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ?

