நற்றிணைப் பாடல் 301:
‘நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5
பாவை அன்ன வனப்பினள் இவள்” என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.
பாடியவர்: பாண்டியன் மாறன் வழுதி
திணை: குறிஞ்சி
பொருள்:
நீண்ட மலையில் பருத்த கோலில் அன்று பூத்த குறிஞ்சிமலர் போன்ற மேனி.
அகன்ற சுனையில் பூத்திருக்கும் நெய்தல் மலரின் இரண்டு பெரிய ஈரமான இதழ்கள் இணைந்ததிருப்பது போன்ற கண்கள். மயில் தோகை போன்ற தோற்றம். கழுத்தில் சிவப்பு-மாலை அணிந்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட கிளி பேசுவது போன்ற வாய்ச்சொற்கள். மூங்கில் போன்ற தோள். ஓவியப் பாவை போன்ற அழகு. இவளது தாயே மறக்கமுடியாத மணம் கமழும் கூந்தல். இவற்றைக் கொண்டவள் இவள். என்றெல்லாம் இவன் உன்னைப் பாராட்டுகிறான், என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள்.