நற்றிணைப் பாடல் 286:
”ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற் செலீஇயர் என் உயிர்” என,
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி! அவர் சென்ற திறமே?
பாடியவர்: துறைக்குறு மாவிற் பாலங் கொற்றனார் பாடல்
திணை: பாலை
பொருள்:
காதில் ஊசலாடும் ஒளி மிக்க தொங்கல் போல் குமிழ மரத்திலிருக்கும் குமிழம் பூக்களும் பழமும் பாறையில் விழுந்து பரந்து கிடக்கும் குன்றத்தின் வழியில் அவர் பொருளீட்டச் சென்றிருக்கிறார். அவர் போனபின்னர் இன்னும் வாழும் என் உயிர் செத்தொழியட்டும். இவ்வாறெல்லாம் சொல்லிக்கொண்டு, அணிகலன் பூண்டவளே, நீ நொந்து நொந்து அழுவதை விட்டுவிட்டுப் பொறுத்துக்கொண்டிரு. நினைத்துப் பார்த்தால், அவர் சென்றதன் காரணம் விளங்கிவிடும். நண்பர்கள் செல்வம் பெறவேண்டும் என்பதற்காகவும், உன் தோள் அணிகலன்களைப் பூணவேண்டும் என்பதற்காகவும் அன்றோ அவர் பொருளீட்டச் சென்றிருக்கிறார். தோழி இவ்வாறு சொல்லித் தலைவியைத் தேற்றுகிறாள்.