நற்றிணைப் பாடல் 287:
”விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த்
நல் எயிலுடையோர் உடையம்” என்னும்
பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
”தேர் மணித் தௌ; இசைகொல்?” என,
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
பாடியவர்: உலோச்சனார்
திணை: நெய்தல்
பொருள்:
யானைப்படையை உடைய வேந்தன் வானளாவிய மதிலுக்குள் இருப்போர் வாடும்படி முற்றுகையிட்டிருக்கும்போது, பாதுகாப்பாக மதில் காப்போரைக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு, மதிலுக்குள் இருக்கும் அரசன் (பெருந்தகை மறவன்) அரண்மனையில் இருப்பது போல, நான் தெம்பாக இருந்தேன்.
பசுமையான இலைகளுடன் நெய்தல் அடைந்துகிடக்கும் குளிர்ந்த நீர்நிலத்தின் தலைவன் என் காதலனாகிய சேர்ப்பன்.
அவன் அச்சம் தரும் முதலைக்கு அஞ்சாமல் என்னருகில் வந்தபோது மனம் கலங்கிச் சுருங்காமல் (அருகாது) இருந்தேன். இப்போது அவன் வருவதில்லை. நள்ளிரவில் ஏதாவது பறவை ஒலி கேட்டால், அந்த ஒலி அவன் வரும் தேரின் ஒலியோ என்று ஏக்கத்துடன் கேட்டுக்கொண்டு ஊரெல்லாம் உறங்கும்போது உறங்காமல் கிடக்கிறேன். தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.