• Sun. Apr 28th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 20, 2023

நற்றிணைப் பாடல் 277:

கொடியை; வாழி – தும்பி! – இந் நோய்
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ – அறனிலோய்! – நினக்கே?
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.

பாடியவர் : தும்பி சேர் கீரனார்
திணை : பாலை

பொருள் :

வண்டே! அறநெறியிலே செல்லாதோய் நீ மிக்க கொடியை நமது மாளிகையைப் பொருந்தக் காவலாயிருக்கும் மாட்சிமைப் படப் பெரியதாக அமைக்கப்பட்ட நுண்ணிய முட்களையுடைய வேலியிலே படர்ந்து; தேனொடு தழைந்த குலைகட்டிய பீர்க்கம்பூவிலே சென்று தேனைப் பருகி; அதற்கு மாறாக நறுநாற்றமில்லாமையினாலே என் பசலையிடத்து முரன்றாயும் அல்லை; சிறிய குறிய நின் பேடு விரும்புதலும் நீ விரைவாக வோடிச் சென்று அதன் மனம் நெகிழப் புணர்ந்து தலையளி செய்ததன் பயனாகவோ?; என்னிடத்து அன்பிலராகிக் கொடிய மலையிலே செல்லுதற்கரிய சுரத்திற் சென்ற தலைவர்பால் ஆங்குச்சென்று அவர் விரைவில் வருமாறு ஈங்கு யானுற்ற நிலைமையை யுரைத்தாயுமில்லை; நினக்கு நின்னுடம்பே கரியததாலன்றியும் அறிவும் (நன்கு) கரிய நிறமுடையதோ? அதனையேனுங் கூறிக்காண்; இங்ஙனம் கொடியையாகிய நின்னிடத்து என் துன்பத்தைக் கூறியதனாலேயே இந்நோயிலே பட்டு இப்பொழுதே இறப்பேனாக; நீ நீண்டகாலம் வாழ்ந்திருப்பாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *