சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நரேன், அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், பின்னர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான கைதி படத்தில் மீண்டும் நடிக்கத் துவங்கிய நரேன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் இணைந்து விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மலையாளம், தமிழ் என இரு மொழியில் உருவாகியுள்ள படத்தில் பிரைவேட் டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நரேன். மலையாளத்தில் இந்தப்படத்திற்கு அதிர்ஷ்யம் என பெயர் வைக்கப்பட்டு அந்தப்படத்தின் டிரைலரும் தற்போது வெளியாகியுள்ளது.
அதேசமயம் இதன் தமிழ்ப்பதிப்பில் நட்டி மற்றும் கதிர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடித்திருக்கின்றனர். இரண்டு மொழிகளுக்கும் பொதுவான கதாபாத்திரங்களில் நரேன், ஜான்விஜய், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் நடிக்கின்றனர்.