• Sat. May 4th, 2024

சூரசம்ஹாரம் எப்படி உருவானது..!

Byவிஷா

Nov 18, 2023
சூரன் மாமரமான இடம் மாம்பாடு என்று அழைப்படுகிறது. முருகன் சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். சூரசம்ஹாரம் முடிந்த பின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். இதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான் திருச்செந்தூர் கோவில். 
படைக்கும் கடவுளான பிரம்மாவின் இரு புதல்வர்களான தட்சன், காசிபன் சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். இதில் தட்சன் சிவபிரானுக்கே மாமனாராகியும், தனது அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அதேபோன்று காசிபன் ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகினில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். 
இதைத் தொடர்ந்து காசிபனும் அந்த அசுரப் பெண்ணும் மனித உருவத்தில்  முதலாம் சாமத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மன் உடன் இன்னும் 4 குழந்தைகள் பிறந்தது. காசிபன் தன் பிள்ளைகளிடம்,  சிவபெருமானை நோக்கி வடதிசைநோக்கிச் சென்று தவம் செய்து, வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள் என உபதேசம் செய்தார். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வேண்டிய வரம்  கேட்டு, மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என்றும் கேட்டான். ஆனால் சிவனோ பிறப்பு என்றால் இறப்பும் இருக்கும் உனக்கு எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். அப்போது புத்திசாலித்தனமாக, தனக்கு ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் அழிவு வர வேண்டும் எனக் கேட்டு வரத்தையும் பெற்றான்.
இதனால் சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். சூரபத்மனுக்கு பயந்து இந்திரன் பூலோகம் வந்து ஒளிந்து கொள்ள, இதை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க, அதிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது கொண்டு சேர்த்தான்.
அந்த ஆறு தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க, அவர்கள் ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினர். இத்திருவுருவைப் பெற்றதால் முருகப் பெருமானுக்கு ஆறுமுகசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. தேவகுரு பிரகஸ்பதி மூலம் முருகப்பெருமான் அசுரர்களின் வரலாற்றினை அறிந்து, திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு, தேவர்களே.. நீங்கள் அசுரர்களுக்கு அஞ்சத் தேவையில்லை. 
உங்கள் குறைகளை போக்கி அருள் செய்வதே என் வேலை, என்றார். உடனே அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் காசிபனின் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்து, ஆறாம் நாள் எஞ்சியவன் தான் சூரபத்மன். அப்போதும் முருகன் சூரபத்மனிடம் தனது சேனைத்தலைவரான வீரபாகுவை, தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனாலும் சூரபத்மன் திருந்தாத, சூரனுடன் போர் புரிய பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகனை அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். உடனே முருகனும் அந்த நகரை அடைந்தார்.
சூரன் அவரைப் பார்த்து  உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது, நீயா என்னைக் கொல்ல வந்தாய் என்று ஏளனம் செய்தான்.  முருகன் தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தியதோடு, சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார். சூரனுக்கு ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்பதால் முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இதனால் முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்து, தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டியதால், அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. 
சூரனும் உன்னை பயமுறுத்த மாறிய கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை தேடி வரும் பக்தர்கள் என்னில் வந்து நீராடியதுமே, அவர்களின் ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். அந்த வரத்தை அவனுக்கு முருகனும் அளித்தார். பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். ஆனால் சூரனுக்கு ஆணவம் தலை தூக்க, அவன் மாமரமாக மாறி தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை மாமரத்தின் மீது விட்டதும், மாமரம் இரண்டாகப் பிளந்தது. 
சூரன் மாமரமான இடம் மாம்பாடு என்று அழைப்படுகிறது. முருகன் சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். சூரசம்ஹாரம் முடிந்த பின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். இதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான் திருச்செந்தூர் கோவில். மேலும் தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். அதனால் மறுநாள் முருகன், தெய்வானை திருமண வைபவத்தோடு தான் விழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *