மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மசூதி முன்பு நடந்த தீ மிதி நிகழ்வில் முஸ்லீம்களுடன் இந்துக்களும் பங்கேற்றனர்.
விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் . இதனையடுத்து நேற்று முன்தினம் கொரோனா விதிகளை பின்பற்றி தீ மிதி விழா நடைபெற்றது. இதற்காக மசூதியின் உள்ளே முஸ்லீம் மற்றும் இந்து என இரு மதத்தினரும் ஒன்று கூடி வெற்றிலை, பாக்கு மற்றும் ஊதுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் வைத்து படைத்தனர்.
இரவு 11.30 மணியளவில் முஸ்லிம்கள் அருகில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு சென்று, புனித நீராடிவிட்டு தீக்குண்டத்தில் இறங்கினர். முஸ்லீம் பெரியவரை தொடர்ந்து, அவருக்கு வலது புறம் இந்து மதத்தை சேர்ந்தவர்களும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களும் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் ஒற்றுமையில் வேற்றுமை காணும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக மொஹரம் பண்டிகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.