• Mon. May 20th, 2024

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…

ByNamakkal Anjaneyar

May 8, 2024

திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மூடியதை கண்டித்து பகுதி பொதுமக்கள் சுமார் 50 பேர் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தின் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தகவல்கள் பரிமாறிக் கொள்ள தகவல் தொடர்பு சாதனமாக புறாக்கள் தூது, ஒற்றர்கள் என பயன்படுத்தி வந்த மன்னர்கள் காலத்தியமுறையை மாற்றி ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது தகவல் தொடர்பு சாதனமாக தபால் மற்றும் தந்தி முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய தகவல்களை அடுத்தவர்களுக்கு பரிமாறிக் கொள்ள ஒரே சாதனமாக தபால் மற்றும் தந்தி இருந்து வந்த நிலையில் தொலைபேசி வந்தது ஆனாலும் தபால் துறை நலிவடைந்து விடவில்லை. தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த போது ஒரு ரூபாயில் இந்தியா முழுக்க பேசிக் கொள்ளலாம் என்ற தொலைபேசி வசதி ஆங்காங்கே எஸ்டிடி பூத்துகள், ஃபேக்ஸ் என வசதிகள் விரிவடைந்த போது தபால் துறை சற்றே நலிவடைய தொடங்கியது. ஆனாலும் பதிவுத் தபால்கள் அரசுத்துறை தகவல்கள், பதிவு செய்யப்பட வேண்டிய தகவல்கள், என சிலவற்றை தபால் துறை மூலமாகவே செய்ய வேண்டி இருந்ததால் தொடர்ந்து தபால் துறை செயல்பட்டு வந்தது தற்போதைய அறிவியல் சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக, ஆண்ட்ராய்டு செல்போன்கள், மெசேஜ், வாட்ஸ் அப், பேஸ்புக்,என தகவல் தொழில்நுட்ப வசதி விரிவடைந்து குறைந்தபட்சம் ஒரு நாள் காத்திருந்தால் தான் தகவல் தெரியும், தந்தி மூலம் சுமார் ஆறு மணி நேரம் அல்லது 8 மணி நேரம் காத்திருந்துதான் தகவல் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி உலகம் முழுவதிலும் இருந்து தகவல் வினாடிக்குள் கிடைத்துவிடும் என்கிற நிலை உருவானதன் பின்னால் அஞ்சலகத்துறை முற்றிலுமாக நலிவடைந்தது. இதனால் அஞ்சலகத்துறை செலவினங்களை குறைக்கும் வகையில் தபால் பரிவர்த்தனைகள் இல்லாத தபால் நிலையங்களை நாடு முழுவதும் மூட முடிவெடுத்தது. அதன்படி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 91தபால் நிலையங்களை மூட உத்தரவிடப் பட்டது. அதன்படி திருச்செங்கோடு பகுதியில் சாணார்பாளையம், மற்றும் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தபால் நிலையங்கள் மூடநடவடிக்கை எடுக்கப்பட்டது. நெசவாளர் காலனி தபால் நிலையத்தை பொருத்தவரை 40 ஆண்டுகளுக்கு அங்கு தபால் நிலையம் வேண்டும் என நினைத்த பொதுமக்கள் ஊர் இடத்தை ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுத்து குறைந்த வாடகைக்கு கட்டடத்தை கொடுத்து தபால் நிலையம் தொடர்ந்து அங்கே இயங்கி வருகிறது. அங்குள்ள பொதுமக்கள் பெண்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். மூன்று கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட்டாக 4கோடி ரூபாயும் அங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டெபாசிட்டாளர்கள் கணக்காளர்கள் பொதுமக்கள் இடம் கொடுத்தவர்கள் என யாருக்கும் எந்தத் தகவலும் கொடுக்காமல் இரவோடு இரவாக தபால் நிலையத்தை காலி செய்து விட்டனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் எந்த தகவலும் கொடுக்காமல் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென காலி செய்ததை கண்டித்தும் தங்களது பகுதிக்கு அவசியம் தபால் நிலையம் வேண்டும் என வலியுறுத்தியும் 5வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் W.T.ராஜா தலைமையில் திருச்செங்கோடு தலைமை தபால் நிலைய அலுவலர் இந்திராவிடம் மனு கொடுக்க வந்தனர். மத்திய அரசின் முடிவு என்பதால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் நாமக்கல்லில் உள்ள கண்காணிப்பு அலுவலரிடம் மனு கொடுக்க வேண்டும் என கூறி மனுவை பெற மறுத்தார். இதனால் வெகுண்டு எழுந்த பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் முன்பு 7 பெண்கள் உட்பட 50 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் தலைமை தபால் அலுவலர் இந்திரா மனுவை பெற்றுக் கொண்டதோடு கண்காணிப்பு அலுவலரிடமும் மனுவை கொடுக்கச் சொல்லி பொதுமக்களை கேட்டுக் கொண்டார். நாடு முழுவதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதாலும் பொதுமக்களின் கோரிக்கையை துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *