• Fri. Jan 24th, 2025

இன்று மதியம் 2 மணிக்குள்… பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ByIyamadurai

Dec 27, 2024

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தினர் ஞானசேகரன் என்பவரை கடந்த 25-ம் தேதி கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) நகல் வெளியாகி சர்ச்சையானது. பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் பெயர், முகவரி, அவர் எங்கே வசிக்கிறார், எந்த துறையில் படித்து வருகிறார், எந்த நபருடன் தனியாக அமர்ந்திருந்தார் என்பது குறித்த பல்வேறு விவரங்களுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகியிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. வரலட்சுமி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னணியில் யாரோ ஒருவர் ‘சார்’ இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் இதுவரையிலும் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கை பொறுத்தவரை காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஆகியோர் இன்று (டிச.27) 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.