நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி-5 ரக ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர்.
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல் 12.15 மணிக்கு குன்னூர் அருகே காட்டேரி பூங்கா, நஞ்சப்பன் சத்திரம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. மலைப்பகுதியில் இருந்த மரத்தில் மோதி பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்து நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேருக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் செய்தியை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாசித்தார். இரு அவைகளிலும் சபாநாயகர் தலைமையில் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாகவும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.