கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கைக்கு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூரை பொறுத்தவரை கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 12 மணி நேரத்தில் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.