தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர் கனமழையாலும், அணைக்கட்டுகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலையாலும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பேரிடர் குறித்து தற்போதைய நிலவரம் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களில், மீட்பு பணிகளை ராணுவம் தொடங்கியுள்ளது. உணவு, குடிநீர் விநியோகிக்கப்பட்டன.
▪கடும் வெள்ளத்தால் பல கிராமங்கள் 3 நாட்களாக தொடர்பற்று இருந்த நிலையில், ராணுவம் அங்கு சென்று மீட்பு பணிகளை தொடங்கியது.
▪தூத்துகுடி அரசு மருத்துவமனை, நீதிமன்றம், காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் தண்ணீர் முற்றிலும் வடியவில்லை.
▪நெல்லை ரயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து சீரானது.
▪நெல்லை – திருச்செந்தூர் இடையே இன்று பேருந்து சேவை இயக்கப்படவில்லை. நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கு வழக்கம் போல பேருந்துகள் இயக்கம்.
▪தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மீட்பு, நிவாரணப் பணி நடக்கிறது.
▪மத்திய அரசின் குழு தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை இன்று பார்வையிடுகிறது.
▪பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 5000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால், தாமிரபரணியில் நீர் வரத்து குறைந்துள்ளது.