• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின்மீட்டர்களை மாற்ற உத்தரவு

Byவிஷா

May 7, 2024

தமிழகம் முழுவதும பழுதடைந்துள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான மின்மீட்டர்களை மாற்ற மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்துக்கு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடிஇணைப்புகள் உள்ளன. இந்நிலையில், மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் பழுதுஏற்பட்டுள்ளதால் மின்வாரியத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், பழுதடைந்த மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது..,
தமிழகம் முழுவதும் 2லட்சத்து 25 ஆயிரத்து 632 மீட்டர்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பழுதடைந்த மீட்டர்களால் துல்லியமான மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடிவதில்லை. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அத்துடன், நுகர்வோருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பழுதடைந்த மீட்டர் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைவிட அதிகமாக ரீடிங் காண்பித்தால் அதற்கான கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த நேரிடும். இதனால், அவர்களுக்கு நிதிச் சுமை ஏற்படும்.
இந்நிலையில், பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்றபொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தெற்கு வட்டத்தில் மிகஅதிகபட்சமாக 36 ஆயிரத்து 343 மீட்டர்களும், குறைந்தபட்சமாக கரூர் வட்டத்தில் 3,400 மீட்டர்களும் பழுதடைந்துள்ளன.
இதேபோல், சென்னை வடக்கு கோட்டத்தில் 22,093 மீட்டர்களும், கோவைவட்டத்தில் 7,089, ஈரோடு வட்டத்தில் 6,535, மதுரை வட்டத்தில் 23,023, திருச்சி வட்டத்தில் 22,880, திருநெல்வேலி வட்டத்தில் 27,716, வேலூர் வட்டத்தில் 25,463, விழுப்புரம்வட்டத்தில் 19,299, திருவண்ணாமலை வட்டத்தில் 12,465, தஞ்சாவூர் வட்டத்தில் 19,326மீட்டர்களும் பழுதடைந்துள்ளன.

மேலும், எதிர்காலத்தில் மீட்டர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க 20 லட்சம் மீட்டர்களை கொள்முதல் செய்ய அண்மையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.