கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகம் நிலவுகிறது. குறிப்பாக இமயமலையை ஒட்டியிருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.
இதனால், விமானம், ரயில், சாலைப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக வடமாநிலங்களில் பொதுமக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் அடர்த்தியான மூடுபனி காரணமாக சுமார் 110 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக வருவது மற்றும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் டெல்லியின் அதிகபட்ச வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது பருவத்தின் சராசரியை விட மூன்று புள்ளிகள் அதிகம் என சொல்லப்படுகிறது.