சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை இன்று இரவு 11 மணியுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு வந்தது. கடந்தாண்டு இல்லாத அளவுக்கு இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து வந்தனர்.
திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி மண்டல பூஜையின்போது சாமி ஐயப்பனுக்கு இன்று அணிவிக்கப்படும். இந்தத் தங்க அங்கி கடந்த 21 ஆம் தேதி ஊர்வலமாக புறப்பட்டு நேற்று சபரிமலைக்கு வந்து சேர்ந்தது.
மண்டலப் பூஜையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு, மாலை மண்டலப் பூஜைகள் நடைபெற்று இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். பின்பு கோயிலின் நடை சாத்தப்பட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை மீண்டும் மகர விளக்கு வைபவத்துக்காக திறக்கப்படும்.