தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புக்கு புதிய செயல் திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மழைக் காலங்களில் மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதும், கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பதும் தொடர் கதையாக வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்கடாக காட்சியளிக்கின்றன.
இருப்பினும் போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் மழைநீர் கடலில் வீணாக கலந்து வருகிறது. வரமாக கிடைக்கும் மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள் தூர்வாருதல், புதிய தடுப்பணைகள் கட்டுதல் போன்ற திட்டங்கள் மூலம் மழைநீரை சேமித்து வைக்க முடியும். எதிர்கால நலன் கருதி தொலைநோக்கு பார்வையுடன் மழைநீர் சேகரிப்புக்கு புதிய செயல் திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.