• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Byவிஷா

Apr 30, 2025
பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், அனைத்து பள்ளிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சூழலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சில நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

• பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதிசெய்திட வேண்டும். அதன் பின்னர் 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
• மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். அதேபோல் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்வி சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துசெல்லவேண்டும்.
• தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண-சாரணியர் இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
• விடுதிக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது. விடுதி பராமரிப்பு பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண்விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.
• பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ, பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்கவேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
• மாணவர் மனசு புகார் பெட்டி அனைத்து பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகார் அளிக்கும் குழந்தைகளின் விவரங்களை வெளியிடக்கூடாது என்பதால், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடத்தில் இந்த பெட்டியை வைக்கவேண்டும்.
• கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் அமைத்திட வேண்டும்.
• ஆண் ஆசிரியர்கள், பணியாளர்கள் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதிக்கக்கூடாது. இதனை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
• சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரமில்லாமல் நடத்தப்படும்போது, குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதால், கண்காணிப்பதை கட்டாயமாக செயல்படுத்த ஒரு பெண் பணியாளர்கள் பொறுப்பாக மாற்றுப் பணியை செய்யவேண்டும்.
• பெண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே பணியில் இருத்தல் வேண்டும். இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்கவேண்டும்.
• பாலியல் குற்றச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால் மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
• இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.