
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளியும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 13-ம் தேதி காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது. அதன் பின்னர் மே 15 அன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது.
பின்னர் மீண்டும் தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அதன்படி, இன்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,11,111-க்கும் விற்பனையாகிறது.
