• Fri. Jan 17th, 2025

உசிலம்பட்டியில் கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் கைது.., போலீசார் விசாரணை…

ByP.Thangapandi

Jun 25, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பிரிவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்-ன் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பெருங்காமநல்லூர் பிரிவில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து இந்த பதுக்கல் தொடர்பாக அயோத்திபட்டியைச் சேர்ந்த ராஜாக்கொடி, மதுரையைச் சேர்ந்த அமுதா என்ற இருவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்து, 21 கிலோ கஞ்சா மற்றும் 5120 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து சேடபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்., சேடபட்டி காவல் நிலைய போலீசார் இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று உசிலம்பட்டி அருகே வடுகபட்டி சுடுகாடு அருகே கஞ்சா பறிமாற்றம் செய்ய உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் சோதனை நடத்திய போது கஞ்சா பறிமாற்றம் செய்து கொண்டிருந்த வடுகபட்டியைச் சேர்ந்த வளர்கொடி, மதுரையைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்ற மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டு, 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம், உசிலம்பட்டியில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என பெண்கள் கஞ்சா பதுக்கல் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டு கைதான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.