மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தில் 100 க்கும் அதிகமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமம் துவங்கியது முதலே சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் மயானத்தை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் எரியூட்டியும் வருகின்றனர்.,

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாலுச்சாமி என்ற தனிநபர் தனது பட்டா இடத்தில் மயானம் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கின் படி மயானத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.,
இதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மயானத்தை அகற்ற வந்த போது, மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

இந்த போராட்டத்தின் போதே ஒரு சில இளைஞர்கள் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி பெட்ரோல் கேன்களுடன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், கால அவகாசம் வழங்க வேண்டும் பட்டியலின மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று மயானத்தை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டதால் பட்டியலின மக்களும் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.,





