அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுரு, இவர் கோவை சூலூர் முதலி பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடைய தென்னம்பாளையத்தைச் சேர்ந்த பாலுக்கு சொந்தமான ஆயில் விற்க்கும் செட்டில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் அந்த வேலையை விட்டுவிட்டு அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார் ராஜகுரு.இதனிடையே வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ராஜகுருவை தாக்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான ராஜகுரு கூறுகையில்,சூலூர் அருகே இருகூர் பகுதியில் அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் உள்ளன.இவற்றிலிருந்து கோவை மண்டலம் முழுவதும் உள்ள பங்குகளுக்கு பெட்ரோல், டீசல், பர்னஸ் ஆயில், தார் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுகின்றன.
கிடங்கிலிருந்து வரும் டேங்கர் லாரிகளில் இருந்து பர்னஸ் ஆயிலை பாலு என்பவர் தனது கூட்டாளிகளுடன் திருடி வருவதாகவும் ,ஏற்கனவே ஆயில் திருட்டு சம்பவத்தில் பாலு மீது வழக்கு உள்ளதாகவும், மேலும் தான் அந்த ஆயில் திருட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி தன்னை அவரது கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஆயுதங்களுடன் தாக்கியதாக தெரிவித்தார் .மேலும் இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.