டாடா அறக்கட்டளை அமைப்பின் முயற்சியில், விஜயவாஹினி அறக்கட்டளையுடன் இணைந்து தெலங்கானா அரசு ஒத்துழைப்புடன் ஐதராபாத்தில் உள்ள முதியோர்களுக்கு உதவ கடந்த 2017ஆம் ஆண்டு இந்த முதியோர் உதவி மைய எண் தொடங்கியது.
தற்போது, இந்த முதியோர் உதவி எண்ணை நாடு முழுவதும் செயல்படுத்த டாடா அறக்கட்டளையும், என்எஸ்இ அறக்கட்டளையும் மத்திய அரசுடன் தொழில்நுட்பப் பங்குதாரராக இணைந்து மூத்த குடிமக்களுக்கா நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எண் வழியாக மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் இலவசமாக பெற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 சதவீதம் பேர் அதாவது 300 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், சவால்களையும் நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதுமான இலவச உதவி மைய எண் வெளியிடப்பட்டிருக்கிறது. இது முதியோர் உதவி எண் என அழைக்கப்படுகிறது.
இந்த எண் வழியாக ஓய்வூதிய விஷயங்கள், சட்ட சந்தேகங்கள், உணர்வுப்பூர்வமான ஆதரவு போன்றவற்றின் வழிகாட்டுதல்களை இலவசமாக பெற முடியுமென அரசு தெரிவித்துள்ளது. தகவல்கள் மட்டுமன்றி, துஷ்பிரயோக பிரச்சினைகள் இருந்தாலும், இந்த உதவி மையம் அதை சரிசெய்யுமென சொல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து குடிமக்களுக்கும் தேவையான தகவல்களையும், அன்றாட பிரச்னைகளுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்குவதே இந்த முதியோர் உதவி எண்ணின் நோக்கமாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.