திண்டுக்கல்லில் பகுதிநேர வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராம் செயலி மூலம் வலைவிரித்து பணமோசடி செய்யும் மர்மகும்பல்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதால்,திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்லில் டெலிகிராம் செயலி மூலமாக ஆன்லைனில் பகுதிநேரம் வேலை செய்யலாம் எனக்கூறி அறிமுகமாகும் மோசடி நபர்கள், ஓட்டல்கள், தனியார் இணையதள பக்கங்கள், விற்பனை செயலிகள், விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு 5 நட்சத்திர ரேட்டிங் வழங்கி அதை ஸ்கீரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உடனடியாக யு.பி.ஐ., செயலி மூலம் ரூ.150 சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி வலைவிரிக்கின்றனர். இதை முயற்சி செய்பவர்களின் பண ஆசையை அதிகரிக்க
செய்யும்விதம் பேசி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தை முதலீட்டு பணமாக செலுத்த மோசடிகும்பல் வற்புறுத்துகிறது. பல தவணைகளில் ஆயிரம், லட்சம் என பணம் கறக்கும் கும்பல் ஒருகட்டத்தில் குரூப்களை கலைத்து விட்டு தலைமறைவாகின்றனர். பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.

பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.




