நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் கொடுத்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வந்த தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் குழு தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன், சிந்தனைசெல்வன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, ராஜா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று பணி புரியும் பெண்கள் தங்கும் விடுதி, அரசு மருத்துவமனை, ஆதிதிரவிடர் பள்ளி மாணவர் விடுதி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அரசின் திட்டங்களுக்காக மனு கொடுக்க மரத்தடியில் காத்திருந்தவர்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனார். அப்போது முதியோர் உதவித் தொகை, சாதிச்சான்றிதழ் உள்ளிட்டவைகள் கிடைக்காமல் நின்றவர்களுக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து மாலைக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு நின்றவர்களிடம் உறுதி அளித்தனர்
பின்னர் மதியம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுக் கணக்கு குழுவினர் அனைத்து துறை அதிகாரிகளிடம் திட்டப்பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதிகள் குறித்தும், செலவினங்கள் விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். கூட்டத்தின் முடிவில் காலையில் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் ஆய்வின் போது நின்ற முதியவர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை மற்றும் சாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர்.
மதியம் 12 மணிக்கு பொதுமக்களிடம் கோரிக்கையை கேட்ட நிலையில் சுமார் 5 மணிநேர காலத்திற்குள் அவர்களுக்கான கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக உத்தரவு ஆணை பிறப்பித்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட நாட்களாக இந்த திட்டங்களை பெறுவதற்கு அலைந்து திரிந்த தங்களுக்கு ஆய்வுக்கு வந்த இடத்தில் தங்களது மனுக்களை பரிசீலனை செய்ய உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியையும் அவர்கள் கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துச் சென்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு..,
ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.
