மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் பால் பூத்களுக்கு பால்பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட முழுவதும் ஆவின் டெப்போக்களில் விற்பனை செய்யப்படும் நீலநிற பால்பாக்கெட்டுகளில் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி வீசுவதாக கூறி மாடக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உணவுப்பாதுகாப்புத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து உணவுப்பாதுகாப்புத்துறையினர் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் டெப்போக்களில் இருந்து நீலநிற பால்பாக்கெட்டுகளில் உள்ள பால் மாதிரிகளை சேகரித்தனர். மேலும் சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணையில் இருந்தும் பால் மாதிரிகளை எடுத்துசென்று ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
குழந்தைகள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் பிரதானமாக பயன்படுத்தபடும் ஆவின் பால்பாக்கெட்டுகளில் மதுரை மாவட்ட முழுவதும் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் நெடி வருவதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கத்தில்
ஆவின் நீலநிற பால்பாக்கெட் தொடர்பாக புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. நீலநிற பால்பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பேப்பர் ரோலில் ஏற்பட்ட குறைபாடுகளால் நெடி வீசியது தெரியவந்து தற்போது புதிய பால்பாக்கெட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், பால்பாக்கெட்டுகளை தரமின்றி அளித்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்போ, நடவடிக்கையோ என்பது முழுமையான விசாரணைக்கு பின்னர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்றனர்.
ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தரக்கட்டுப்பாடு அலுவலர் மூலமாக பரிசோதித்த பின்னரே விநியோகம் செய்யப்படும் நிலையில் எப்படி பால்பாக்கெட்டுகள் நெடியுடன் 3 நாட்களாக விநியோகிக்கப்பட்டது என்பது குறித்தான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




