அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பலியாகிஉள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பாதல்காம், அனந்த்நாக் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் பனி லிங்க திருக்கோயில். இந்தியாவில் கோடைகாலமாக கருதப்படும் மே முதல் ஆகஸ்ட் வரையில் இந்த பனி லிங்கம் தானாக கால சூழ்நிலையால் உருவாகின்றது. இந்த பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேக வெடிப்பு காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.