அரசு மாதிரி பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன் 4.12 நிமிடத்தில் 198 நாடுகளின் கொடியை வைத்து நாடுகளின் பெயர், தலைநகரம் பெயர்களை கூறி INDIA BOOK OF RECORDS 2021 சாதனை படைத்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சியில் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரதீஷ். இந்த மாணவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே, உலக நாடுகளின் பெயர்கள் அவற்றின் தலைநகரத்தின் பெயர்களைக் கூறி அந்த நாட்டின் கொடியை அடையாளம் காட்டுவதில் சிறந்து விளங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவரின் பெற்றோர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் தீவிர பயிற்சியால் தற்பொழுது மாணவர் பிரதீஷ் 4 நிமிடம் 12 வினாடிகளில் 198 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து அந்த நாட்டின் பெயரையும், அவற்றின் தலைநகரத்தின் பெயரையும் சரியாக கூறி, INDIA BOOK OF RECORDS 2021ல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த பள்ளி மாணவர் பிரதீஷுக்கு அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர். மேலும் இந்த மாணவர் 330 திருக்குறள், பாரத் ரத்னா விருது வாங்கியவர்களின் பெயர் மற்றும் வருடத்தை ஒப்பிவித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.