திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைப்பட்டி கிராமம். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம சமுத்திரம் குளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு மூலம் வரும் தண்ணீர் இந்த குளத்தில் சேகரிக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்த சுற்றுவட்டார கிராமத்தில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. இங்கு, தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது.
இந்த குளத்தில் வருடந்தோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து வருங்காலங்களில் குளம் நிரம்பும் இதனால் தற்போது மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
இந்த வருடம் இன்று (23.07.25) பிரம்ம சமுத்திர கரையில் உள்ள கன்னிமார் தெய்வம், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவர் பழனிச்சாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
பருவமழை வரவேற்கும் விதமாகவும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இந்த மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

இதில் அணைப்பட்டி, கொட்டப்பட்டி, கோட்டூர், ஆவாரம்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர், பாலம் ராஜாபட்டி, குட்டத்துப்பட்டி உள்ளிட்ட 18 பட்டியஜவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
பெண்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வலை வீசியும், கூடைகளை பயன்படுத்தி மீன்களை உற்சாகமாக அள்ளி சென்றனர். கட்லா, ஜிலேபி கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மீன்கள் சிக்கியது.
மேலும், மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீன்கள் கிடைத்ததால் அனைவரும் சந்தோஷத்துடன் வீடு திரும்பினார்.