மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது உசிலம்பட்டி கண்மாய்.
இந்த கண்மாயை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து தூர்வாரி கரையை பலப்படுத்தி கரைப்பகுதியில் 100 க்கும் அதிகமான பனை மரங்கள் வேம்பு, தேக்கு, பாதாம், வாகை உள்ளிட்ட பல்வேறு நிழல் தரும் மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் அவல நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு இன்று மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்து கரை பகுதியில் நட்டு வைத்திருக்கும் மரங்களிலும் பற்றி எரிந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். இதனால் அடுத்தடுத்த மரங்களுக்கும் தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
கண்மாயை பாதுகாக்க தன்னார்வ அமைப்புகள் போராடி தூர்வாரி மரங்களை நட்டு வைத்துள்ள சூழலில், குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் ஆதாரமாக உள்ள கண்மாயை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.