கோவை மாவட்டங்கள் நிர்வாகத்தில் அலட்சியத்தால் கோவை மாவட்டம் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமீப காலமாக யானை தாக்கி உயிர் இழந்து வருவது அதிகரித்து வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் வனத்துறையினரிடமும், பலமுறை புகார் அளித்தும், தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியைச் சேர்ந்த ரத்னா மற்றும் செல்வி ஆகியோர் வீட்டின் அருகே குப்பைகளை கொட்ட சென்ற நிலையில் கடந்த வாரத்தில் காட்டு யானை தாக்கி இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலை அறிந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களை குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார். மேலும் அதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேலும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் செல்வதுரை, கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் விஜயகுமார், பேரூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா (எ) ராமமூர்த்தி மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொடர்புத்துறை செயலாளர் சசிகுமார் உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.