மதுரையில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சுகாதாரத்துறையின் மூலம், காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..,
மதுரை மாவட்டத்தில் மதுரை நகர், ஊரக பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 75க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 20 மேற்பட்ட டெங்கு நோயாளிகளும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல தனியார் மருத்துவமனையில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 41 வயதான சத்யபிரியா அந்த பகுதி உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகாதால், மாட்டுத்தாவணி உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் தற்போது உயிரிழந்திருக்கிறார். இதேபோல திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட ஜெ.ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த கண்ணன் அவர்களின் ஏழு மாத பெண் குழந்தை அனன்யா கடந்த ஒரு மாத காலமாக காய்ச்சல், சளி தொந்தரவு இருந்து வந்த நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயர்ந்திருந்தார். ஆகவே மாவட்ட ஆட்சியர் மதுரையில் சுகாதாரத் துறையினர் மூலம், காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்த கடிதத்தின் வாயிலாக கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.