மதுரையில் மின்கம்பம் சுவரில் சாய்ந்து விழுந்ததில் மின்வாரிய ஊழியர் ஒருவர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே வாகனம் மோதி பழுதாகி இருந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் ஊன்றும் பணியில் நேற்றிரவு மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதிய மின்கம்பத்தை நிலை நிறுத்துவதற்காக அருகில் இருந்த மரத்தின் மீது கயிறு கட்டி இழுத்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்ததில் மின்கம்பம் அருகில் இருந்த சுவற்றில் விழுந்தது, இதில் சுவரும் இடிந்து அருகில் நின்று கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் முத்துக்குமாரின் தலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பணி நிரந்தம் பெற்ற நிலையில், இவருக்கு சரண்யா என்ற மனைவியும் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பணியின் போது சுவர் தலை மீது விழுந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.