• Fri. Mar 24th, 2023

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 14, 2023

சிந்தனைத்துளிகள்

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: “வா மகனே… நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.”
ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?”
“மன்னித்துவிடு மகனே… உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.”
“அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?”
“உன்னுடைய உடைமைகள்.”
“என்னுடைய உடைமைகளா! அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்?”
“இவை அனைத்தும் உன்னுடையது அல்ல… அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.”
“என்னுடைய நினைவுகளா?”
“அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.. அவை காலத்தின் கோலம்.”
“என்னுடைய திறமைகளா?”
“அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது. அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது.”
“அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?”
“மன்னிக்கவும். குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.”
“அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?”

“உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.”
“என் உடல்?”
“அதுவும் உன்னுடையது கிடையாது உடலும் குப்பையும் ஒன்று.”
“என் ஆன்மா?”
“இல்லை. அது என்னுடையது.”
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். காலி பெட்டியைக் கண்டு கண்ணில்
நீர் வழிய கடவுளிடம் “என்னுடையது என்று எதுவும் இல்லையா?” எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், “அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.
எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே.”
ஒவ்வொரு நொடியும் வாழ் உன்னுடைய வாழ்க்கையை வாழ் மகிழ்ச்சியாக வாழ மறக்காதே… .அது மட்டுமே நிரந்தரம்.
உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *