• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byகாயத்ரி

Jul 16, 2022

ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, “அரசே ! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் “ என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசர் மிகவும் கோபமுற்று, ”இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!”என்று உத்தரவிட்டார்.

அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று கேட்டார். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ”மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்” என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம் ! பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் ஜெயிக்கலாம்.! நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர எந்தவித மனகசப்பையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் !