சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதிலிருந்து கிழக்குப் பக்கம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும். இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இதன் அருகே கண்மாயிலிருந்து வெளியேறக் கூடிய தண்ணீருக்கு முன்பு உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது அந்தத் தடுப்பணை மீது சுமார் மூணு அடி உயரத்தில் மீண்டும் தடுப்பணை கட்டியதால், தற்போது பெய்த கனமழையில் கண்மாயில் தண்ணீர் பெருகியதால் தடுப்பணை வழியாக சிறிதளவே தண்ணீர் செல்கிறது. இதனால் தடுப்பணை தடுத்து நிறுத்திய தண்ணீர் அருகில் உள்ள வயல்களில் பரவி வயல்கள் முழுவதும் மழை தண்ணீரால் மூழ்கி இருக்கிறது. ஓரிரு நாளில் பெய்த மழைக்கே இந்த நிலை என்றால் தொடர்ந்து மழை பெய்தால் இந்த நிலங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மலைப்பட்டி கிராமத்திற்கும் தண்ணீர் புகுந்து விடக்கூடிய அவல நிலை உள்ளது.
இது போக தென்கரை கழிவு நீர் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வந்தால் தடுப்பனை வழியாக செல்ல முடியாமல் தண்ணீர் அதிகமாக தேங்கி வயலில் தண்ணீர் சூழ்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது குறித்து விவசாயிகள் நல்லமணி, வெள்ளையன் உட்பட 20 மேற்பட்ட விவசாயிகள் கூறும்போது, இந்த தடுப்பணை கட்டியதால் தண்ணீர் அதிகப்படியாக தேங்கி எங்கள் வயல்களில் சூழ்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை இருக்கும் என்று தடுப்பணை கட்டும் பொழுது தெரிவித்தோம். இதற்கு அதிகாரிகள் அப்படியெல்லாம் தண்ணீர் தேங்காது. அப்படி தண்ணீர் தேங்கினால் இதன் உயரத்தை குறைத்து தருகிறோம் என்று உறுதி அளித்ததாக கூறுகின்றனர். தற்போது பெய்த கன மழைக்கு விவசாய நிலங்களில் தண்ணீர் மூழ்கியுள்ளதை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். செவிடன் காதில் சங்கு ஊதியது போல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காதால், விவசாயிகளுடைய நிலை பெரிதும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளது. ஆகையால் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட தடுப்பணையை நேரில் பார்வையிட்டு நீரில் மூழ்கிய விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். எது எப்படியோ இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறக்கூடிய நிலையில் விவசாயிகளுக்கு இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.