• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ByAnandakumar

Feb 15, 2025

கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது எனக் கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். பாசன வாய்க்காலில் தண்ணீரை ஒரு வார காலம் நிறுத்தி விட்டு கட்டுமானப் பணிகள் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு. கடைமடை வரை தண்ணீர் வராது என்றும் ஏப்ரல் மாதம் பணிகள் செய்ய கோரிக்கை.

கரூர் மாவட்டம் புகழூரை அடுத்த செம்படாபாளையத்தில் புகழுர் வாய்க்காலிலிருந்து பாப்புலர் முதலியார் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் தோட்டக் குறிச்சி, தளவாபாளையம் வழியாக நெரூர் ஒத்தக்கடை வரை பாய்கிறது. இந்த வாய்க்காலை நம்பி சுமார் 4,500 ஏக்கர் பாசன பரப்பு இருந்து வருகிறது. இதில் தென்னை, வாழை, கரும்பு, கோரை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆக்ஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டுள்ளது. பாசன வாய்க்காலில் தூர் வாரப்படாததால் இன்னும் கடைமடை பகுதியாக ஒத்தக்கடை வரை தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் தோட்டக்குறிச்சி மற்றும் சிந்தாயூர் கிராமங்களில் வாய்க்கால் கரையில் கட்டுமானப் பணி நடத்த வேண்டி இருப்பதால் 7 நாட்கள் தண்ணீர் அடைக்க வேண்டி இருப்பதால், இது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் இன்று காவிரி ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வாங்கல், நெரூர் உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக உதவி பொறியாளர் சதீஸ், கட்டுமானப் பணிகளை 7 நாட்களில் முடித்து விடுவேன் என்றும், அதன் பிறகு தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தார். அதிகாரியின் இந்த முடிவிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தண்ணீர் தற்போது அடைத்தால் மீண்டும் தண்ணீர் கடைமடை வராது என்றும், வழக்கம் போல் தண்ணீர் அடைக்கும் ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகு பணிகளை மேற்கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்குள் அரசு ஒதுக்கீடு செய்த பணம் திரும்ப அரசுக்கே சென்று விடும் என்பதால் பணிகளை மேற்கொண்டே ஆகவேண்டும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் தண்ணீர் அடைக்கும் முடிவை கை விட்டால் தான் இந்த இடத்திலிருந்து செல்வோம் எனக் கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.