திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணை பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணை 72 அடி ஆகும் 10 நாட்களுக்கு முன்பு 69 அடியாக இருந்தது. அணைக்கு சீரான நீர்வரத்து வந்த நிலையில் அணை 72 அடியை எட்டி நிரம்பியது.

தற்போது அணைக்கு விநாடிக்கு 42 கன அடி வீதம் நீர் வருகிறது. இந்த அணை நீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் தாலுகாக்களை சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பொதுப்பணித் துறையினர் கூறுகையில்,’அணைக்கு வரும் 42 கன அடி நீர் பிரதான வாய்க்கால் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்’ என்றனர்.




