விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. ஸ்ரீபத்திரகாளியம்மனை வரவேற்கும் விதமாக கோவில் வளாகத்தில், கண்ணைக் கவரும் வகையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் அரை மணி நேரம், பல்வேறு நவீனரக வாணவெடிகள் வண்ணமயமாக வானில் வெடித்துச் சிதறியது. வாணவேடிக்கை நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை, ஸ்ரீபத்திரகாளியம்மன் சர்வ அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தேர் வடம் தொடுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ‘சித்திரை திருவிழா தேரோட்டம்’ நாளை (வெள்ளி கிழமை) மாலையில் நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.