சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுகவினர், பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதை கண்டித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்ட படியே சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலையின் கீழ் அமர்ந்து சிவி சண்முகம் தர்ணா செய்தார். இதனால் சி.வி.சண்முகம் போலீசாரால் கைதானார்.