• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Feb 28, 2025

மார்ச் 5-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் மார்ச் 5-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, தவெக உள்பட தமிழ்நாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என்று செய்தியாளர்கள் வினா எழுப்பினர்.

அதற்கு, அவர் “தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கருத்துக்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம். தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான்” என்று பதிலளித்தார். இதற்கிடையில் முதலமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.