• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது

Byகுமார்

Nov 19, 2021

தென் தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் வைகை அணையை சுற்றி உள்ள மேகமலை, வெள்ளிமலை, வருஷநாடு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது.

தற்போதைய நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடி உயரமாக உள்ளது. இதனால் வைகை அணையின் நீர் இருப்பு 5681 கன அடியாக உள்ளது. இதனால் வைகை அணைக்கு வரக்கூடிய 3254 கன அடி தண்ணீர் மொத்தமாக உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 3வது முறையாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 3254 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை நகர்ப்பகுதிகளில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் யானைக்கல் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது. தரைப்பாலம் வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.