ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்வுக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழை இன்று வழங்கியது.
இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்வும், அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். எம்.பிக்கள், மாநிலங்களின் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இறுதியில் திரெளபதி முர்மு 6 லட்சத்து 76ஆயிரத்து 803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதல்முறையாக நாட்டிலேயே பழங்குடியினத்தைச்சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக பதவி ஏற்கஉள்ளார். அதுமட்டுமின்றி சுதந்திரம் அடைந்த பின் குறைந்த வயதில் ஜனாதிபதியாக பதிவி ஏற்கும் முதல் பெண் முர்மு(வயது64). ஜனாதிபதியாக 2-வது பெண் என்ற பெருமையும் முர்முக்கு கிடைக்கும். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரெளபதி முர்முவுக்கு, வெற்றிச் சான்றிதழை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியது.
இதை தேர்தல் ஆணையம் தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளது. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து வரும் 25ம்தேதி நாடாளுமன்றத்தின் அவையில் பதவியேற்பு விழா நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.