மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன் காளைத்தேவர் நகரில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி சார்பில், வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காத சூழலில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாக்கடை நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகர் பகுதியில் வடிகால் வசதிக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், விரைவில் இதை சரி செய்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.