நாட்டில் முதல் முறையாக ஐதராபாத்தை சேர்ந்த முதியவரின் கிட்னியில் இருந்து 156 கற்களை அகற்றி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பசவராஜ். 50 வயதான இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு அடி வயிறு வலி தீவிரமாக ஏற்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் மேற்கொண்ட பரிசோதனையில் அதிகளவில் கற்கள் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்முடிவில் கற்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோப்பி முறையை பயன்படுத்தி, 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் முடிவில் மருத்துவர்கள் வெற்றிகரமாக 156 கற்களை வெளியே எடுத்தனர். இந்த நடைமுறையைப் பயன்படுத்தி நாட்டில் ஒரு நோயாளியிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீர் பாதையில். சாதாரண நிலைக்கு பதிலாக வயிற்றுக்கு அருகில் கற்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவரது உடல்நிலை இயல்பாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபரிடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கற்கள் உருவாகியுள்ளது.
முதலில் எந்த அறிகுறியும் தென்படாத சூழலில் கடந்த சில வாரங்களாக வலி அதிகரித்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுகினார் என்றும் கூறினர்.